விமர்சனங்களுக்கு நீதிமன்றங்கள் அப்பாற்படடவையா? நீதிபதிகளும் அதற்கு அப்பாற்பட்டவர்களா? – திருமாவளவன்

நீதிபதிகள் பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடாது, கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது என விசிக அறிக்கை. 

சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்னும் அதிகாரம், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்கிற அச்சுறுத்தலை உருவாக்குவதாக உள்ளது. நீதியையும் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிற போதும் விமர்சனங்களிலிருந்து நீதிமன்றங்கள் அப்பாற்பட்டவையா? நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன. சந்தேகங்களுக்கு இடமளிக்காதவர்களே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கமுடியும்.

நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் இது பொருந்தும் தானே. ஆனால், கருத்துச் சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயுமென நீதிபதிகள் வரிந்து கட்டுகின்றனர். அந்தவகையில் தான் சமூக ஊடகச் செயற்பாட்டாளர் சவுக்கு சங்கர் தண்டிக்கப்பட்டுள்ளார். அக்குற்றத்துக்கு அதிக அளவு தண்டனை என்னவோ (ஆறு மாதங்கள்) அதனையே அளித்துள்ளனர். இது அதிர்ச்சியளிக்கிறது.

நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனை இயற்கை நீதிக்கு (Natural justice) எதிரானதாக உள்ளது. எனவே, இதனை நீதிமன்றமே ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும்.

பொதுவாக நீதிபதிகள் ஒரு வழக்கில் தாம் மறைமுகமாகத் தொடர்பு கொண்டிருந்தால் கூட அந்த வழக்கை விசாரிக்காமல் விலகிக் கொள்வது வழக்கம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களே வழக்கை விசாரித்து தண்டனையும் அளித்திருக்கிறார். இது சட்டப்படி முறையானதல்ல என்று பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

நீதிபதிகள் பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடாது, கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு இந்த தண்டனையை ரத்து செய்ய நீதிபதிகள் முன்வரவேண்டும் என விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment