மழை நிவாரண தொகை பெற இன்று கடைசி நாள் என அறிவிப்பு..!

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமாரி ஆகிய மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வட்டங்களில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ. 6000 , மற்ற பகுதிகளுக்கு ரூ.1,000 நிவாரண தொகையாக முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் வெளிட்ட அறிக்கையில், “நிவாரண நிதியை பெற நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு 02.01.2024 மதியம் 4 மணி வரை 91 சதவீதத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் பெறாத காரணத்தாலோ, டோக்கன் பெற்றும் உரிய நேரத்தில் வர இயலாத காரணத்தாலோ, டோக்கன் தவறவிட்டதனாலோ மேற்படி நிவாரண நிதியினை இதுவரை பெறாதவர்கள், கடைசி வாய்ப்பாக கைரேகை வைத்து நிதியுதவி பெற்றுக்கொள்ளலாம். நிவாரண தொகை 03.01.2024 அன்று மாலை 5 மணி வரை மட்டுமே வழங்கப்படும்.

மேலும் 04.01.2024 முதல் பொது விநியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணிகள் நியாய விலைக்கடைகளில் தொடங்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை வர இருக்கும் காரணத்தால் அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டியுள்ளது. எனவே மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்பில்லை என்பதால், நிவாரண நிதி பெறாமல் தவறவிட்டவர்கள் கடைசி நாளான இன்று தவறாமல் நிவாரண தொகையினை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் குமாரி ஆகிய மாவட்டத்தில் நிவாரண தொகையை இதுவரை பெறாதவர்கள் இன்று மாலை 5 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.