நான் குறிப்பிட்டுக் கூறியதை அண்ணன் துரைமுருகன் கவனிக்க மறந்துவிட்டார் – அண்ணாமலை பதில்

என் மண் என் மக்கள் யாத்திரையின்போது நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் விவசாயத்துக்கு எதுவும் செய்யவில்லை. காமராஜர் அவர்கள் ஒன்பது ஆண்டுகளில் 12 அணை கட்டினார். காமராஜர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிக காலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக, திமுக. திமுக தற்போது 6வது முறையாக ஆட்சியில் இருக்கிறது. எனவே, கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக கட்டியது வெறும் 5 அணைகள் என பேசியதாக கூறப்பட்டது.

மேலும், விவசாயத்துக்கு அணை தேவை என்று நாம் நினைப்போம். ஆனால், திமுகவுக்கு அணை கட்டாமல் இருந்தால் தான் மணல் அள்ள முடியும் எனவும் விமர்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்ணாமலையின் பேச்சிக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திமுக ஆட்சி மீது தவறான குற்றசாட்டை சுமத்திய அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.

காமராஜர் ஆட்சி காலத்தில் கிருஷ்ணகிரி அணை, சாத்தனுர் அணை, மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது என்பதில் மாற்று கருத்து இல்லை. தமிழ்நாட்டை ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை சுமத்தி இருக்கிறார்.

திமுக ஆட்சியில் 5 அணைகள் மட்டுமே கட்டப்பட்டது என அண்ணாமலை சொன்னது ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய் எனவும் விமர்சித்தார். 40 அணைகளுக்கு மேல் கட்டி புகழ் பெற்றவர் கலைஞர். நித்தம் ஒரு பொய் பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை நண்பர் அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். குற்றம் சொல்வதற்கு முன் அது உண்மையா என்பதை பரிசீலினை செய்து பார்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்ட நெடிய அரசியல் அனுபவம் மிக்கவருமான, திமுக பொதுச்செயலாளர், அண்ணன் அமைச்சர் துரைமுருகன் அவர்கள், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

திமுகவினர், திமுக தலைவர் பேரனுக்கு போஸ்டர் ஒட்டுதல் முதற்கொண்டு, சாதாரண பொதுமக்கள், கடைகள் நடத்துபவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட எவ்வளவு பெரிய சமூக விரோதச் செயல்கள் செய்தாலும், அவர்கள் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிக்கையே, வழக்கமாக அவர் பெயரில் வெளிவரும்.

அதிலிருந்து ஒரு நல்ல மாற்றமாக, எதிர்க்கட்சியாக இருந்தும், என் மீது கொண்டுள்ள அன்பினாலும், நான் தவறான தகவல்களைத் தெரிவித்து விடக்கூடாதே என்ற அக்கறையினாலும் அண்ணன் துரைமுருகன் அவர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். நேற்றைய தினம் நடைபயணத்தின்போது, கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக வெறும் 5 அணைகளையே கட்டியுள்ளது என்று பேசியிருந்தேன்.

அண்ணன் துரைமுருகன் அவர்கள், திமுக 40க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கொங்கு பகுதியில் 5 அணைகள் என்று நான் குறிப்பிட்டுக் கூறியதை அவர் கவனிக்க மறந்துவிட்டார். புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் அண்ணன் துரைமுருகன், அவசரகதியில், இந்த சிறிய தகவலைச் சரிவர கவனிக்காமல் கோட்டை விட்டுவிட்டாரே என்பது வருத்தத்தைத் தருகிறது.

மேலும், திமுக கட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ள அணைகளில் பல, அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையும், திமுகவினர் திருத்த மறந்துவிட்டார்கள் என்பது, அண்ணன் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்நிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது என தெரிவித்துள்ளார்.