தந்தை உயிரிழப்பு.! திரைபிரபலங்களை தவிர்க்கும் அஜித்.? அறிக்கை மூலம் கூறிய செய்தி.!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உடல்நலக்குறைவு காரணமாக அஜித்தின் தந்தை சுப்ரமணியன் உயிரிழந்துவிட்டார்.

இவருக்கு வயது 84. இந்த உயிரிழப்பை தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா, இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் தந்தை பி.எஸ்.சுப்ரமணியன் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார், இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். இதனால், எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.

எனவே, இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என குறிப்பிட்டு இப்படிக்கு அனுப் குமார், அஜீத் குமார், அனில்குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, அஜித்தின் தந்தை மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நடிகர் அஜித்  மறைமுகமாக இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Comment