ஆண்டவனாக இருந்தாலும் விடமாட்டோம்… ஜெ.வை ஏற்றுக்கொண்டால் கூட்டணி.! அதிமுகவினர் கடும் விமர்சனம்.!

பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு அதிமுக பிரமுகர்கள் கடும் விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.  

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கையில், தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஊழல் குற்றத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள் என கூறியிருந்தார். இந்த கருத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக குறிப்பிடுவது போல் இருக்கின்றன என அதிமுக தரப்பு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் என பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி அங்கு வந்த அதிமுக நிர்வாகிகளிடம் செய்டியாளர்கள் அண்ணாமலை கூறிய கருத்து பற்றி கேட்டனர். அதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

அதிமுக நிர்வாகி பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், அதிமுகவை தவறாக பேசியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அண்ணாமலை கருத்து குறித்து தலைமை முடிவு செய்யும். ஜெயலலிதா இடத்தை விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதியில்லை. ஜெயலலிதாவை யார் ஏற்றுக்கொள்கிறாரோ.? அவர்களுடன் தான் எங்கள் கூட்டணி என அவர் தெரிவித்தார்.

அடுத்து அதிமுக நிர்வாகி ஓ.எஸ்.மணியன் கூறுகையில், அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவை தெய்வமாக பார்த்து வருகிறோம். புரட்சி தலைவி அம்மா எங்கள் உயிரில் ஒன்றிவிட்ட ஒன்றாகும். அவர்களை பழித்து பேசுபவர்கள், குறைத்து பேசுபவர்கள் அது ஆண்டவனாக இருந்தாலும் ஏற்று கொள்ள முடியாது. இதற்கான நடவடிக்கை குறித்து தலைமை முடிவு செய்யும் என பேசினார்.