அதிமுக – பாஜக கூட்டணி.! ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கிய அறிவிப்பு.!

அதிமுக தலைவர்கள் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர் விமர்னங்களை கூறி வந்ததை அடுத்து , அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூடி கலந்தாலோசித்து இனி , அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என்றும் , தேசிய அளவிலான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்தும் அதிமுக விலகுவதாக அறிவித்தது.

இந்த முடிவை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்து இருந்தாலும், அடுத்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இதனை உறுதியாக அறிவித்தார். அண்மையில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு அவர்கள் தன்னிச்சையான நிலைப்பாடு. அதனை பற்றி கவலை கொள்ள தேவையில்லை என்று கூறினர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி கூட்டணி பற்றி அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.

வரும் 11ஆம் தேதி அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்து பின்னர் பாஜக கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், எங்கள் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்துவது, பழைய உறுப்பினர்களை புதுப்பிப்பது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதால் அதற்கான தேர்தல் பணிகள், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட வேலைகளையும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கூடி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்விக்கு, அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணி பற்றி ஓ.பன்னீர்செல்வத்திடம் தேசிய தலைவர்கள் பேசி வருகின்றனர். விரைவில் பாஜக தலைமை யோசித்து முடிவு செய்வார்கள் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.