அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது – நிர்மலா சீதாராமன்

தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் 5 ஏக்கரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது, கனிமொழி எம்.பி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.

 இந்த நிலையில், அடிக்கல் நாட்டியபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆதிச்சநல்லூரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. ஆதிச்சநல்லூரில் பல கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில், இங்கிருந்து பல நாடுகளுக்கு வணிகம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

மனிதர்களை புதைத்த இடங்களும் இங்கு உள்ளது, அதில் அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது. 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக உபயோகபடுத்தப்பட்ட நெல், திணை, தங்கம் ஆகியவற்றை நமது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள தொல்பொருட்களையும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கவுள்ளோம். ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் ஆன்சைட் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையுமின்றி போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும் என தெரிவித்துள்ளார்.