காந்தி ஜெயந்தி – மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை..!

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் அவரை அனைவருமே, காந்தியடிகளை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், டெல்லியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியடிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய தேசத்தின் நலனுக்காக, மகாத்மா காந்தியடிகளின் போதனைகளை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இதனை தொடர்ந்து, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மரியாதை செலுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மகாத்மா காந்திஜி ஒரு தனிநபர் மட்டுமல்ல, அவர் ஒரு சித்தாந்தம் மற்றும் நமது மகத்தான தேசத்தின் தார்மீக திசைகாட்டி.

சத்தியம், அகிம்சை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகவாழ்வு ஆகிய அவரது இலட்சியங்களுக்கு நிரந்தரமான மதிப்பு உண்டு. அவரது கொள்கைகளுக்கு அவரது ஜெயந்தியில் தலைவணங்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.