முகக்கவசம் அணிய மறுத்த 2 பயணிகளை இறக்கி விட புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்த அமெரிக்க விமானம்

அமெரிக்காவில், 2 பயணிகள் விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்து, விமான நிறுவன ஊழியர்களுன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புறப்பட்ட இடத்திற்கே விமானம் திருப்பி கொண்டுவரப்பட்டது.

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்ற பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டெல்டா தனியார் விமான சேவை நிறுவனமானது, தங்களது விமானத்திலும், விமான நிலையத்திலும் பயணிகள், ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை தீவிரமாக கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டிட்ரோய்ட் நகரிலிருந்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லான்டா நகருக்கு 23 ஆம் தேதி டெல்டா விமானம் புறப்பட்டது.

அதில் பயணித்த 2 பயணிகள் விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்து, விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து, விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புறப்பட்ட டிட்ரோய்ட் நகருக்கே விமானம் திருப்பி கொண்டுவரப்பட்டது. அங்கு அந்த 2 பயணிகளை கிழே இறக்கிவிட்டு, விமானம் அட்லான்டா நகருக்கு புறப்பட்டு சென்றது. இதனை அந்த விமான நிறுவன செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.