கலைஞரின் மனச்சாட்சியான முரசொலிமாறனுக்கு 90வது பிறந்தநாள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் மரியாதை.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வந்துள்ளார். நேற்று மதுரை வந்தடைந் முதல்வர், மதுரை கிழக்கு மண்டல அலுவலகத்தில் மறைந்த திரைப்பட பாடகர் டி.எம்.சௌந்தராஜனுக்கு அமைக்கப்பட்ட வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து இன்று மதுரையில் திமுக அலுவலகத்தில் மறைந்த திமுக மூத்த தலைவர் முரசொலி மாறன் அவர்களின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு வைக்கப்பட்டு இருந்த முரசொலி மாறன் உருவப்படத்திற்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் முதல்வர் பதிவிடுகையில், நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று.

மதுரை சிலைமானில் தலைவர் கலைஞர் அவர்களால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் அவர்கள் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று. முரசொலி மாறன் அவர்களது புகழ் போற்றுவோம். அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம் என அதில் பதிவிட்டுள்ளார்.

மதுரையில் முதல்வர் செல்லும் வழியில் காத்திருந்த மக்களிடம் முதல்வர் நேரில் சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இன்று மாலை ராமநாதபுரம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு திமுக நிர்வாகிகளுக்கு நடத்தப்படும் நாடாளுமன்ற தேர்தல் பயிற்சி பாசறையில் கலந்துகொள்கிறார்.