பிரான்ஸ் நாட்டு கலவரம்.! 45,000 பாதுகாப்பு படை வீரர்களுடன் உச்சகட்ட பாதுகாப்பு.!

பிரான்ஸ் நாட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர 45 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் புறநகரில் போக்குவரத்து சோதனையின் போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பதின்ம வயது (17 வயது) இளைஞர் காவல்துறையால் சுடப்பட்டார். இந்த சம்பவத்தில் அந்த இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினரும், பிற பாதுகாப்புப் படையினரும் நாடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, சுடப்பட்ட 17 வயது இளைஞர் ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் நடத்திய இந்த தாக்குதல் இனவெறி தாக்குதலாக பார்க்கப்பட்டதும், இதற்கு முன்னர் ஆப்பிரிக்க இன மக்களை பிரான்ஸ் காவல்துறையினர் நடத்திய விதமும், இந்த உயிரிழப்பை இனரீதியிலான தாக்குதலாக பார்க்க தொடங்கிவிட்டனர்.கான் பின்னர் தான் இந்த சம்பவம் கலவரமாக வெடிக்க காரணமாக அமைந்தது என செய்திகள் வெளியாகி வருகின்றன.

செவ்வாய் அன்று உயிரிழந்த இந்த இளைஞரின் உடல் இன்று தான் அடக்கம் செய்யப்பட உள்ளது என்பதால் பாரிஸ் மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 45 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இளைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும் இன்னும் சில மணிநேரம் அங்கு நாடு முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுவரை நாடு முழுவதும் சுமார் 500 இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 2000 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது.