41 தொழிலாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள் என நம்புவோம் – சர்வதேச சுரங்கப்பாதை தொழில்நுட்ப நிபுணர்

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி  தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்  போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 14 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பே இந்த சுரங்க பாதை தோண்டும் பணி முழுதாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது வரை சுரங்கம் தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பல முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது மலையை குடைந்து மேலிருந்து துளையிட்டு தொழிலாளர்களை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி..!

சர்வதேச சுரங்கப்பாதை தொழில்நுட்ப நிபுணர் அர்னால்ட் அவர்கள் இதுகுறித்து  கூறுகையில், மலைப் பகுதியில் நடைபெறும் மீட்புப் பணி என்பதால் இது மிகவும் சிக்கலானதாக உள்ளது. எப்போது நிறைவடையும் என உறுதிப்படச் சொல்ல முடியாது. கணிக்க முடியாத ‘போர்’ போன்ற சூழல்தான் இந்த மீட்புப் பணியில் நீடிக்கிறது. 41 தொழிலாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள் என நம்புவோம். ஆனால், காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.