தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3 விரல்கள் அகற்றம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

கம்பீரமாக இருந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்தவகையில், விஜயகாந்துக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தைராய்டு பிரச்சினையால் மிகுந்த அவதிப்பட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பிரச்சனையால் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்த பிறகு விஜயகாந்துக்கு ஓரளவு உடல்நிலை முன்னேற்றம் தெரிந்தது.

இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வரும் விஜயகாந்த், கடந்த 18-ம் தேதி சென்னை நந்தப்பாக்கத்தில்  உள்ள மியாட் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பியதாக கூறப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வலது காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து விரல்களை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. விஜயகாந்தின் வலது கால் கட்டை விரல் முதல் மூன்று விரல்கள் அகற்றப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment