பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு ரூ.1.55 கோடி செலவில் 2 மண்டபம்.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் என்கிற சிற்றூரில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தார். இவரது பிறந்தநாள் ஆனது தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவின் போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். நினைவிடத்தின் முன் ஒரு சிறிய இடத்தில், குறுகிய நேரத்தில் அதிக கூட்டம் கூடுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

வெயில் மற்றும் மழையில் இருந்து அவர்களைப் பாதுகாத்திடவும், கூட்ட நெரிசலை தடுப்பதற்கும் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் விழாவின் போது நினைவிடத்தின் முன் தற்காலிக அமைக்கப்பட்டு வருகிறது. தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி அரசுக்கு பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை அளித்து வருகின்றனர்.

மக்களின் கோரிக்கையின் படி, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் ரூ.1,42,80,000 மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12,54,000 மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.