அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் சம்பளம் உயர்வு – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவிப்பு.

சம்பளம் உயர்வு:

மாநில அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 17 சதவீதம் சம்பளம் உயர்த்தி முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். 7-வது ஊதியக் குழு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசு ஊழியர் சங்கம் நேற்று முதல் போராட்டத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து முதல்வரின் அறிவிப்பு வந்துள்ளது.

7வது ஊதியக் குழு:

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு, முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களின் இரண்டு முக்கிய கோரிக்கைகளை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை போராட்டத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், 7வது ஊதியக் குழு நியமிக்கப்பட்டு, இடைக்கால நிவாரணமாக 17 சதவீத ஊதிய உயர்வு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.

எதிர்கால நடவடிக்கை:

இதற்கிடையில், மாநில அரசு ஊழியர் சங்கத் தலைவர் சி.எஸ். ஷடாக்ஷரி கூறுகையில், 7வது ஊதியக் குழு மற்றும் என்பிஎஸ் மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால், மாநில அரசு ஊழியர்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உத்தரவு வரும் வரை காத்திருப்போம், மாநில அரசு ஊழியர்களின் இரு கோரிக்கைகள் மீதும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment