எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்தவர்களுக்கு மாதம் ரூ.15,000..! அசாம் அரசு அறிவிப்பு!

எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்குவதாக அசாம் அரசு அறிவிப்பு.

அவசரநிலைக் காலத்தில் (எமர்ஜென்சி காலத்தில்) சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதம் ரூ.15,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் அசோக் சிங்கால், அவசரநிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை “லோக் தந்திர சேனானியாக” மாநில அரசு கருதுகிறது என்றார்.

ஜனநாயகத்தில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 301 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க அசாம் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஜனநாயகத்திற்கான இத்தகைய மக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவே இது செய்யப்படுகிறது. மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில், பயனாளி உயிரோடு இல்லை என்றால் அவரது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் இருவரும் இல்லை என்றால், திருமணமாகாத மகள் இருந்தால், அவருக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் பல மாநிலங்கள்,  அவசரநிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகின்றன, ஆனால் அசாம் மாநிலம் அதிகமான தொகையை வழங்குகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 1975 முதல் 1977 வரை 21 மாத காலத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது.

Leave a Comment