144Section: ராமநாதபுரத்தில் இன்று முதல் அக்டோபர் 15 வரையில் 144 தடை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இமானுவேல் சேகரின் நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இமானு வேல் சேகரன் நினைவிடத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்டவும் போராடினார். இந்த சமயத்தில் இவரது நினைவு தினத்தையொட்டி,  சிவகங்கையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலாக வரும் 23 ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 9-ஆம்  தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க குரு பூஜையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதியான சூழலை உருவாக்கவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் (செப்.9ம் தேதி) அக்டோபர் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 144 தடை உத்தரவு நாளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் அனுமதியின்றி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை அக்டோபர் 30ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நாளில் எந்தவித அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்கும் விதமாக அக்டோபர் 25ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.