SanatanaDharma : உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி.! அயோத்தி சாமியாரின் சர்ச்சையான அறிவிப்பு !

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ,  உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்து அதிர வைத்துள்ளார்.

மேலும், அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அந்த புகைப்படத்தை எரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான் சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைய போவதாக விளம்பரம் செய்து பின்னர் பின்வாங்கிய விளம்பர பிரிய சாமியார் என்பது குறிப்பிடதக்கது.

சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வடமாநிலங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும், தனது நிலைப்பாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.