கூட்டணியிலேயே இல்லாத கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கிய காங்கிரஸ் ! கேரளாவில் சொதப்பல்..!

திருவனந்தபுரம்:
மாநிலங்களவை துணை சபாநாயகர் குரியன் உள்ளிட்ட கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மூன்று எம்.பி.க்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பி.க்களை பெற முடியும். மீதமுள்ள ஒரு எம்.பி காங்கிரஸ் கட்சி பெற முடியும். குரியனை மீண்டும் தேர்வு செய்ய முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
77 வயதாகும் குரியனை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப விரும்பவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் பால்ராம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாக கருத்து பதிவிட்டுள்ளார். 1380-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக இருக்கும் அவருக்கு ஓய்வளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களில் யாருக்கேனும் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இரண்டாண்டுகளாக விலகி இருக்கும் முன்னாள் மந்திரி கே.எம்.மாணியின் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவுக்கு அம்மாநில காங்கிரஸில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்த மாணி பார் ஊழல் வழக்கில் சிக்கியது அக்கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனால், அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால், கே.எம். மாணியின் கட்சி கனிசமான கிறிஸ்தவர்களின் ஓட்டு வங்கியை வைத்துள்ளதால், அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு அவரது கட்சிக்கு காங்கிரஸ் தலைமை சீட் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டதை அடுத்து கே.எம்.மாணியின் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Comment