24 மணிநேரத்தில் 201 பேர் பலி.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிடம் வலியுறுத்தல்.!

கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 201 பேர் காசா நகரில் உயிரிழந்துள்ளனர்.  இதனால் உயிரிழப்புகள் 20 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இதில் உயிரிழந்தோர் பெரும்பாலானோர் காசா நகரத்து பொதுமக்கள் . அதிலும் பெரும்பாலானோர் பெண்கள், வயதானோர், குழந்தைகள் ஆவர்.

ஹமாஸ் – இஸ்ரேல் போரில் அதிகம் பாதிக்கப்படுவது, உயிர்சேதங்களை எதிர்கொள்வது காசா நகரத்து மக்கள் என்பதால் போர் நிறுத்தம் கோரி பல்வேறு நாடுகளும் கூறி வருகிறது. இஸ்ரேலுக்கு உதவி செய்து வரும் அமெரிக்கா கூட தற்போது காசா நகரத்து மக்கள் நலன் கருதி மறைமுக போர் நிறுத்தத்தை கோரியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடல் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், காசா நகரில் நடைபெறும் பேரில்,  மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இஸ்ரேல் ஒத்துழைக்க வேண்டும். காசா நகரில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய முக்கியமான அவசியம் ஏற்பட்டுள்ளது. போர் பாதிப்புகளை நடந்துகொண்டிருக்கும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கவேண்டும் என ஜனாதிபதி பிடன் நெதன்யாகுவிடம் வலியுறுத்தினார்.

ஆனால் அதனை தொடர்ந்து இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேல் அதன் அனைத்து நோக்கங்களையும் (ஹமாஸ் அமைப்பை முழுதாக அழிப்பது) முழுமையாக அடையும் வரை போரை தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.