இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நாடாளுமன்ற நன்னடத்தை குழு தலைவர் வினோத் சோங்கர் மக்களவையில் தாக்கல் செய்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகுவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து நீக்கம்!

மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கூறுகையில், பாஜகவின் இதுபோன்ற செயல் மன வருத்தம் அளிக்கிறது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை. தனது நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மஹுவா மொய்த்ராவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முழுமையான அநீதி அளிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலை காரணமாக மஹுவா மொய்த்ரா பாதிக்கப்பட்டுள்ளார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.