வைகோவுக்கு எதற்காக தனிக்கட்சி? இனியும் அவரால் கட்சியை நடத்த இயலாது – திருப்பூர் துரைசாமி

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என வைகோ கூறுகிறார் என திருப்பூர் துரைசாமி பேட்டி.

கடந்த மாதம் கட்சியின் நலன் கருதி மதிமுகவை, திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதினார். அதில், மதிமுக பொதுச்செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்ட பின்னர் கட்சி விதிகள் பல்வேறு விதமாக மாற்றப்பட்டுள்ளன. மதிமுக கட்சிக்கு முன்னர் இருந்த பெயர் தற்போது மாறிவிட்டது. மக்கள் மத்தியில் சமீப காலமாக அவப்பெயர் உண்டாகி வருகிறது.

திருப்பூர் துரைசாமி கடிதத்துக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பதிலளித்தார். அவர் கூறுகையில், ஜனநாயக உரிமைப்படி அவைத் தலைவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து கட்சி பொதுக்குழுதான் முடிவு செய்யும்.சிலரது தூண்டுதலின் பேரில் அவைத் தலைவர் கடிதம் எழுதி உள்ளார். கட்சியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும்,  துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், துரைசாமி கடிதத்திற்கு பதிலளித்த வைகோ, திமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. துரைசாமி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார். இதையடுத்து, திருப்பூர் துரைசாமி மதிமுகவில் இருந்து விலகினார். இதனிடையே மதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வரும் 14ம் தேதி சென்னையில் நடைபெறும் மதிமுக 29வது பொதுக்குழுவில் நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திறமை, ஆற்றல் இல்லை, இனியும் அவரால் கட்சியை நடத்த இயலாது என திருப்பூர் துரைசாமி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

திருப்பூரில் இன்று செய்தியாளர் சந்திப்பில் துரைசாமி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என வைகோ கூறுகிறார். அப்படியானால் எதுக்கு அவருக்கு தனிக்கட்சி. இதனால், மதிமுகவை, திமுகவுடன் இணைக்க வேண்டியது தானே. திமுகவுடன் கூட்டணி வைக்க நான் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுகிறார்கள்.

எனவே, வைகோவுக்கு தற்போதைய நிலையில் திறமை, ஆற்றல் இல்லை, இனியும் அவரால் கட்சியை நடத்த இயலாது என்றும் நான் விலகுவதாக அறிவித்த பின்னர் எந்த தகவலும் கட்சியில் இருந்து வரவில்லை தெரிவிர்த்துள்ளார்.