பலவீனமான மத்திய அரசு! கட்சத்தீவை மீட்பதே இதற்கு முற்றுப்புள்ளி! மீனவர் நல மாநாட்டில் முதல்வர் உரை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் பங்கேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசின் திட்டங்கள், மீனவர் நலம், கச்சத்தீவு மீட்பு, இலங்கை படையால் மீன்வர்கள் கைது என பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றினார். அப்போது அவரது உரையில், தமிழகத்தை  உலகத்துடன் இணைத்தது கடல். கடல் ஆழமானது மட்டுமல்ல வளமானது. 1076 கி.மீ நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு தான்.

5வது பெரிய மாநிலம்:

இந்தியாவின் மீன்பிடி தொழிலில் 5வது பெரிய மாநிலம் தமிழ்நாடு. வகை வகையாக கடலில் கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள் தான். மீனவர் நலனுக்காக திமுக ஆட்சியில் மீன்வளத்துறை சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம். மீன்வளத்துறை பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என மாற்றினோம். தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு பட்டா:

மீனவ கிராமங்களில் மண்ணரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மீனவர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5,035 மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும். மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு விசைப்படகுக்கு டீசல் 18,000 லிட்டர், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

நிவாரண தொகை உயர்வு:

மேலும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். 45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும். மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார். இதன்பின் உரையாற்றிய முதல்வர், மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றவில்லை என்றும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண பாஜக அரசு என்ன செய்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீனவர்கள் மீதான தாக்குதல்:

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பலவீனமாக இருப்பதால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்கள் கைது, 83 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 9 ஆண்டுகளில் 619 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்குவது கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசே பொறுப்பு என்றார். மோடி அரசு அமைந்த பிறகு தமிழக மீனவர்களின் 122 படகுகளை இலங்கை நாட்டுடைமையாக்கியது.

கச்சத்தீவு:

இலங்கை அரசு மீனவர்களை வவிடுவித்தாலும் படகுகளை தருவதில்லை என குற்றசாட்டினார். மேலும், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது குறித்து எந்த தீர்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவில்லை, 1974 ஜூன் 25ம் தேதி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது. அது சட்டம் அல்ல, கச்சத்தீவை தாரை வார்த்ததை எல்லா நிலையிலும் கருணாநிதி எதிர்த்தார். கச்சத்தீவு உலக வரைபடத்தின் எந்த காலகட்டத்திலும் இலங்கையின் பகுதியாக இருந்தது இல்லை.

இந்தியாவின் ஒருபகுதி:

கச்சத்தீவு எப்போதுமே இந்தியாவின் ஒருபகுதி தான் என்பதை சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். கச்சத்தீவை மீட்பதற்கு பலமுறை மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். பிரதமர் சென்னை வரும் போதெல்லாம் இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளோம். கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்து விட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள்.

கச்சத்தீவை மீட்பதே தீர்வு:

கச்சத்தீவு இந்தியாவுக்கு தான் சொந்தம் என்பதை உறுதி செய்யும் அறிக்கையை 1973-ல் கலைஞர் வெளியிட்டார். எனவே, கச்சத்தீவை மீட்க வேண்டும், கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியாக அமையும் எனவும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.