வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்… திமுக தலைமை முக்கிய அறிவிப்பு!

வாக்காளர் சிறப்பு முகாம்களில் வாக்குச்சாவடி நிலைய திமுக முகவர்கள் தங்களை ஈடுபடுத்த வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 1-1-2024 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வரும் 27ம் தேதி வெளியிட உள்ளது.

அக்.27 முதல் நவம்பர் 9ம் தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும் – திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர,நவம்பர் 3,5 மற்றும் 18, 19 ஆகிய நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

இதனடிப்படையில் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும் – புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மேற்கண்ட அட்டவணையின்படி, சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாட்களில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊர்க்கிளை, வார்டு கழக செயலாளர் நிர்வாகிகள் மற்றும் – வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் (BLA-2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட வேண்டும்.

மேலும், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கழக அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணி குறித்து கழக நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமைக் கழகத்துக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.