வேளாங்கண்ணி திருவிழா – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா 2023-ஐ முன்னிட்டு வரும் 28ம் தேதி முதல் 9ம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அதே போன்று மேற்கண்ட ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்தும் வரும் 28ம் தேதி முதல் 9ம் தேதி வரை இரவு/பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்), கும்பகோணம் சார்பாக இயக்கப்பட உள்ளது. மேலும் மேற்படி அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர். எனவே இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள  வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர்விழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஆரோக்கிய மாதாவின் தேர்பவனி வரும் செப்.7ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழா நாட்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது.