Kalaignar Magalir Urimai Scheme : வங்கியில் வந்து சேரும் ரூ.1000 உரிமை தொகை.! உங்களுக்கு குறுஞ்செய்தி வந்ததா.?

திமுக கொடுத்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டமானது நாளை செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் துவங்கி வைக்க உள்ளார்.

இதில் செப்டம்பர் 5 வரையில் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 56.5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதன்படி பார்த்தால் சுமார் 65 சதவீதம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  எந்தெந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, எந்தெந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த குறுஞ்செய்தியானது அந்தந்த குடும்ப தலைவிகளின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை முதல் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதலே சிலருக்கு மகளிர் உரிமை தொகை பணம் 1000 ரூபாய் வந்து சேர்ந்துள்ளது. ஏற்கனவே சோதனை முறையாக 1 ரூபாய் வரையில் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது.

இந்திட்டத்தின் மூலம் பயன்பெறுவோர் 1 கோடி பேர் உள்ளதால், ஒரே நேரத்தில் அவர்களுக்கு பணத்தை அனுப்ப முடியாது என்ற காரணத்தால் இன்று முதலே சிலரது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரையில் பணம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்கப்பெறாமல் இருக்கும் நபர்களுக்கு மேல்முறையீடு வசதியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி வராத மகளிர் தங்கள் பகுதியில் உள்ள இசேவை மையத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும், இந்த விண்ணப்பங்கள் வருவாய் கோட்டாட்சியரிடத்தில் அனுப்பப்பட்டு பின்னர் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் சிறப்பு செயலாக்கத்துறை அறிவித்துள்ளது.

குறுஞ்செய்தி வராத 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்த  30 நாட்களில் அதற்கான நடவடிக்கை எடுக்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணையவழி வாயிலாக மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.