தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் விபத்தில் மரணம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் திருவனந்தபுரத்தில் சந்திராயன் 3 தொடர்பான செய்திகளை சேகரித்து பின்னர், நேற்று இரவு காரில் திருநெல்வேலி திரும்பி கொண்டிருந்த போது நாங்குநேரி அருகே, விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணித்த நாராயண மூர்த்தி, வள்ளிநாயகம் , நாகராஜ் மற்ற பத்திரிக்கையாளர்கள் படுகாயமுற்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்  தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும் படுகாயமடைந்து பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். என குறிப்பிட்டுள்ளார்.