மதுரை : ரயில் பெட்டியில் தீ விபத்து… நேரில் ஆய்வு செய்த பின் அமைச்சர் மூர்த்தி பேட்டி.!

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலை பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரையை வந்தடைந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த ரயில் போட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ அனைத்து பெட்டிகளுக்கு மளமளவென பரவிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ரயிலில் பயணித்த பயணிகள் சிலிண்டரை எடுத்து சென்ற நிலையில்,  ஏற்பட்ட தீ  விபத்தில், இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

தீ விபத்தில் சிக்கி தற்போது வரை பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில்  உயிரிழந்தவர்கள் உத்திரபிரதேசத்தை   சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா , ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சிறப்பு ரயிலில் பயணித்தவர்கள் உத்திரபிரதேசத்தில் இருந்து வந்தவர்கள். ஆன்மீக யாத்திரைக்காக இங்கே வந்துள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விவரம் இன்னும் முழுதாக தெரியவில்லை.

விபத்து நடந்த செய்தி அறிந்தவுடன் தமிழக முதல்வர் உடனடியாக என்னை தொடர்புகொண்டு, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட சொன்னார், அவர் உத்தரவின் பெயரில் இங்கே வந்துள்ளோம். யாத்திரையாக 55 பேர் இந்த ரயிலில் வந்துள்ளார்கள். காலை 4.30 மணிக்கு ரயில் இங்கே வந்துள்ளது. சுமார் 5.30 மணியளவில் காலை தேநீர் போடுவதற்காக ஸ்டவ் பற்றவைத்துள்ளனர். வெளியில் லாக் போட்டுள்ளார்கள்.

அப்போது தான் ஸ்டவ் வெடித்ததில் உடனடியாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  தற்போது சம்பவ இடத்தில் ரயில்வே துறை அதிகாரிகள், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் , காவல்துறை அதிகாரிகள் உள்ளனர். விபத்து குறித்த முழு விவரங்களையும் அவர்கள் சேகரித்து வருகிறார்கள் என அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.