இதுதான் சிறந்த வாய்ப்பு முழு மதுவிலக்கை அமல்படுத்துங்கள் – எல்.முருகன்

தமிழகத்தில் ஊரடங்கால் கிடைத்த நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பதுதான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அதில், தமிழகத்தில் ஊரடங்கால் கிடைத்த நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பதுதான் என்றும் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கிடைத்திருக்கும் இதுதான் சிறந்த வாய்ப்பு என்று கூறியுள்ளார். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்துகொண்ட நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என்றும் தமிழகத்தின் அனைத்து மக்களின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப்போல கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது சாத்தியமானது என்று நிரூபித்துள்ளது. கடந்த 32 நாட்களாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறியுள்ளார். இதனால் தமிழகம் மது இன்றி மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.