அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றம் இல்லை.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி.!

தமிழக அரசியலில் கூட்டணியில் இருக்கும் பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிமுக தலைவர்கள் பற்றி, குறிப்பாக அண்ணா பற்றி அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கள் பெரும் விவாதத்தை உண்டாக்கியது.

இதன் காரணமாக அதிமுக – பாஜக கூட்டணி தற்போது இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கிய நிர்வாகியுமான ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். இதைதொடர்ந்து,அதிமுக முக்கிய நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி சென்றிருந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கிய தலைவருமான அமிர்ஷாவை சந்திக்க முடியாததால், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில், இந்த ஆலோசனையானது பாஜக – அதிமுக இடையே கூட்டணி இருக்கிறதா.? இல்லையா.? என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி சென்ற அதிமுக நிர்வாகிகள் மத்திய அமைச்சரிடம் கட்சி சார்ந்த விஷயங்கள் குறித்து எதுவும் பேசவில்லை.”

“மக்களின் பிரச்சினைகளுக்காகவே மத்திய அமைச்சரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றம் இல்லை. தற்போதுவரை கடந்த 18ம் தேதி எடுத்த முடிவில் நிலையாக இருக்கிறோம். நாளை நடக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.”

“மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம் இருக்கும் இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்த பூச்சாண்டி வேலைகளுக்கெல்லாம் பயப்படுகிற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இயக்கம் இல்லை. 1972 முதல் அம்மாவின் மீது வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு என பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம் அதிமுக.”

“இப்படி பல சோதனைகளை கண்டும் கட்சியில் தோய்வு இல்லை. எங்களுடைய கடமையில் இருந்து நாங்கள் என்றைக்கும் பின்வாங்குவதில்லை. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கழகம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.