இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகமும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் கடத்தல் காரனை ஹீரோவாகக் காட்டிவிட்டு, போலீசை லஞ்சம் வாங்கும் குண்டர்களாக காட்டியது வேதனை அளிக்கிறது என ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படை ஐ.ஜி. காந்தாராவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ஐ.ஜி. காந்தாராவ் “செம்மரக் கடத்தலை தடுப்பதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநில போலீசார் மற்றும் அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் குறித்து தவறாக சித்தரிக்க வேண்டாம். புஷ்பா 1 படத்தில் சில காட்சிகள் எனக்கு வருத்தம் தந்தது.
குறிப்பாக கடத்தல்காரனை ஹீரோவாகக் காட்டிவிட்டு, போலீசை லஞ்சம் வாங்கும் குண்டர்களாக காட்டியது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே இரண்டாவது பாகத்திலாவது போலீசாரின் தியாகத்தை காண்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.