வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழக மாணவர்கள் பத்திரமாக உள்ளனர்.! அமைச்சர் தகவல்.!

வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். 

டெல்லி, ஹரியானா,  இமாச்சல் பிரதேஷ், உத்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து காஷ்மீர் பகுதியில் அமர்நாத் யாத்திரை சென்றவர்கள், இமாச்சல பிரதேசத்தில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், அதில், வடமாநிலங்களில் பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்க அந்தந்த மாநில பேரிடர் மேலாண்மை துறையிடம் கேட்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹிமாச்சல் பிரதேஷில் சிக்கிய மாணவர்கள் பத்திரமாக இருப்பதை அம்மாநில பேரிடர் மேலாண்மை குழு மூலம் உறுதி செய்துள்ளோம் எனவும், அமர்நாத் யாத்திரைக்கு சென்று பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .