அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.! – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மதுரை, அவனியாபுரத்தில் தை 1ஆம் தேதி பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழா குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாண சுந்தரம்  என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

அந்த வழக்கில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் குழு அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உள்ளனர் எனவும், கடந்தாண்டு போலவே இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து ஆலோசனை குழு அமைத்து, ஆலோசனை நடத்தி அவனியாபுரம் ஜல்லி கட்டு போட்டியை நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment