அண்ணாமலையின் முதல்கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ தலைப்பின் கீழ் முதல்கட்ட நடைபயணம் இன்றுடன் முடிகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த முதல்கட்ட நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என கடந்து தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை.

22 நாட்களில் உள்ள 41 தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை மக்களை சந்தித்து, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். நெல்லையில் 4 நாட்கள் பயணத்தை தொடங்கிய அவர், அங்கு முக்கிய தொகுதிகளின் மக்களை சந்தித்து உரையாடினார். அதன்படி, இன்று முதல்கட்ட பயணத்தை நெல்லையில் நிறைவு செய்கிறார். அடுத்தகட்ட நடைபயணத்தை செப்டம்பர் 3ம் தேதி ஆலங்குளத்தில் தொடங்க உள்ளார்.