அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு! வேறு நீதிபதிக்கு மாற்றும் கோரிக்கை நிராகரிப்பு – ஐகோர்ட் உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வைந்து எடுத்து மறுவிசாரணை நடத்தி வருகிறது. அதாவது, சொத்து குவிப்பு வழக்கில் (லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு) இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்தார்.

அதன்படி, வழக்கு மீதான மறு விசாரணை நடைபெற்று வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது. இதன் காரணமாகவே வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளோம் என நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும், இவ்வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் பொன்முடி பதிலளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.

அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தானாக முன்வந்து எடுத்த வழக்கு கடந்த 7ம் தேதி மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்தது. வேறு நீதிபதிக்கு மாற்றுவதா அல்லது தானே விசாரிப்பதா என முடிவெடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்து  அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். வழக்கை வேறு நீதிபதிக்கு விசாரிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கோரிக்கை வைத்த நிலையில், நிராகரிக்கப்பட்டது. இருதரப்பும் வைத்த கோரிக்கையை நிராகரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை அக்.9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.