சென்னை கொண்டு வரப்பட்டது பாடகி பவதாரிணியின் உடல்!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகி பவதாரிணி உடல் சென்னை கொண்டுவரப்பட்டது. இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிம்பு,  இயக்குனர் பாரதி ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கவின், கமல்ஹாசன்,  உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

பாடகி பவதாரிணி மறைவு! ‘தி கோட்’ படப்பிடிப்பு ரத்து!

இதனையடுத்து, பாடகி பவதாரிணியின் உடலை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு  கொண்டு வருவதற்காக சகோதரர் யுவன் சங்கர் ராஜா இலங்கை இன்று காலை புறப்பட்டார். இந்த நிலையில், பவதாரிணி உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.

பவதாரிணி உடல் அஞ்சலிக்காக தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் வைக்கப்பட உள்ளது. 5 மணிக்கு மேல் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும். இளையராஜா இல்லத்திற்கு கங்கை அமரன் மகன் பிரேம்ஜி, பாரதிராஜா மகன் மனோஜ் ஆகியோர் வருகை தந்து இருக்கிறார்கள்.