குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி…7 பேர் காயம்.!!

பீகார் மாநிலதின்  உள்ள ராம்தயாலு ரயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு 12 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.

இத்தீ விபத்தில் இறந்த நான்கு பெண்களும் 3 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், நரேஷ் ராம் என்ற நபரின் மகள்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் மேலும் 7 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களின் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து , உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சிறிது நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திடீரென எப்படி  தீ விபத்து ஏற்பட்டது என்பதற்கான சரியான காரணத்தை இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.