திமுக அரசு எடுத்த முன்னெடுப்புகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து இருக்கிறது – முதலமைச்சர்

இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது என நிதிநுட்ப நகரம் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் உரை.

சென்னை நந்தம்பாக்கத்தில், 5.6 லட்சம் சதுர அடியில் புதிதாக அமையும் நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டிய பின், இவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி நுட்ப தொழில் சூழல் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

உலக தரம் வாய்ந்த அதிநவீன வங்கி, காப்பீடு உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிதி நுட்ப நகரம் அமைக்கப்படுகிறது. 56 ஏக்கரில் அமையும் நிதிநுட்ப நகரத்தில் வணிக, குடியிருப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இடம்பெறுகிறது. நீடித்த மற்றும் பசுமை உட்கட்டமைப்புகள், பலவகை போக்குவரத்து இணைப்பு வசங்களுடன் அமைக்கப்படுகின்றன. LEED-பிளாட்டினம் தரமதிப்பிடு பசுமை கட்டடம், 250 இருக்ககைகள் கொண்ட கூட்டரங்கம் அமைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும், 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ரூ.12,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதிநுட்ப நகரமும், 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க, ரூ.1000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதிநுட்ப கோபுரமும் அமைக்கப்படுகிறது அமைகிறது. ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எல்லா சேவைகளும் சென்று சேர வேண்டும். கைபேசி மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

சென்னையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரையில், நிதி நுட்ப நகரம் அமைக்கபடும் எனவும் முதல்வர் கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர்,  உலக நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளதால் இங்கு முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இளைஞர்களின் திறனை வளர்க்க வேண்டும். 2 ஆண்டுகளாக திமுக அரசு எடுத்த முன்னெடுப்புகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து இருக்கிறது. தொழிற்துறை மிக வேகமாக முன்னேற்றங்களை உருவாக்கித் தந்து வருகிறது. திராவிடமாடல் ஆட்சி பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும் புதிதாக அமைக்கப்படும் நிதிநுட்ப நகரத்தில் இந்திய, சர்வதேச நிறுவனங்களுக்கு தேவையான வசதி செய்து தரப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.