தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் என பலர் பங்கேற்றனர், இதன் போது பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வீரமங்கை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். தொடர்ந்து ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்ற கனவு நனவாகிய தருணம் இது. கல்வி, மருத்துவம் மட்டுமல்ல விளையாட்டு துறையிலும் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது. தமிழக அரசு சார்பில் இந்த வரவேற்புரை ஆற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2021 ஆண்டில் இருந்து மாநில அளவிலும், இந்தியா அளவிலும், சர்வதேச அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக தமிழகத்தில் நடத்தி வருகிறோம்.
ஆளுநர் மாளிகையில் தங்கும் மோடி! 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்..!
செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழக அரசு நடத்திக்காட்டியது. அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். இன்றைக்கு விளையாட்டுத் துறையிலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு மிக முக்கியமான மாநிலம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
பொதுவாக விளையாட்டுப் போட்டிகள் என்றால், வீரர்கள் வீராங்கனைகள் தான் பங்கேற்பார்கள். ஆனால், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் மூலம் பல்வேறு தரப்பினரையும் விளையாட்டு வீரர்களாக உருவாக்கியுள்ளோம்” என்றார்.