கட்-அவுட் வைத்த ரசிகர்களுக்கு நேர்ந்த சோகம் – ஃபோனில் ஆறுதல் சொன்ன சூர்யா!

கட்-அவுட் வைத்த ஆந்திர ரசிகர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

நடிகர் சூர்யா நேற்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை சிறப்பாக்கும் வகையில், இயக்குனர் சிவா இயக்கிய ‘கங்குவா’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இப்போது, இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். ஆனால், அந்நாளில் அனைவரின் இதயங்களும் நொறுங்கும் வகையில் ஒரு சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்-அவுட் வைக்கும் போது, வெங்கடேஷ் மற்றும் சாய் என்ற ஆந்திர ரசிகர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் நரசரோபேட்டாவில் இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்த ரசிகர்களுக்கு 19 மற்றும் 20 வயது இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோகமான தருணத்தில் நடிகர் சூர்யா, உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினரை தொலைப்பேசி மூலம், தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொண்டார். அதோடு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.