‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட சர்ச்சை.! அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து தொடரப்பட்ட இடைக்கால மனுவை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தி கேரளா ஸ்டோரி என்ற ஹிந்திப் படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு போஸ்டர் வெளியிடப்பட்டபோதே, கேரள அரசால் விமர்சிக்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை சுதிப்தோ சென் என்பவரால் எழுதப்பட்டு இயக்கப்பட்டது. அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ள இப்படம இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

உச்சநீதிமன்றம் மறுப்பு:

இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை கேட்டு நிசாம் பாஷா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மனுதாரர் நிசாம் பாஷா கேரள மாநில உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தி கேரளா ஸ்டோரி சர்ச்சை:

இந்த திரைப்படம், கேரளாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 32,000 பெண்கள், இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு ISIS-ல் சேரும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக படத்தில் காட்சிகள் அமைக்கப்ட்டுள்ளதால் சர்ச்சை எழுந்தது.

பினராயி விஜயன் கண்டனம்:

மேலும், இந்த ட்ரைலர் மதச்சார்பின்மையை கொண்ட கேரளாவில் திட்டமிட்டு பிரிவினையை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.