எடப்பாடி பழனிச்சாமி இதனை ஏற்பாரா.? கூட்டணிக்கு கண்டிஷன் போட்ட சீமான்.!

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக தலைவர்களை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து வரும்  காரணத்தால், பாஜவுடனான கூட்டணியை அதிமுக  முறித்துக்கொள்வதாக அறிவித்தது.

இந்த கூட்டணி முறிவு அறிவிப்பை அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் வரும் 2023 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாது 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனை அடுத்து,  தமிழக அரசியலில் மற்ற கட்சிகளின் கூட்டணி முடிவுகள் மாறும் சூழல் இருக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மிக முக்கியமாக நாம் தமிழர் கட்சி – அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், நாம் தமிழர் கட்சி வரும் 2023 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடும் என தெரிவித்தார்.

இலங்கையில் போர் நடைபெறும் போது இந்திய அரசு இந்தியாவில் இருந்து அமைதிப்படையை அனுப்பியது. அப்போது அங்குள்ள தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது , மூப்பனார், பா.சிதம்பரம் ஆகியோர் நினைத்து இருந்தால் இதனை தடுத்து இருக்கலாம். ஆனால் யாரும் அதனை செய்யவில்லை. தமிழராய் பிறந்தவரெல்லாம் தமிழனல்ல என்று குறிப்பிட்டார்.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தமிழர் மீட்சியே தமிழர் எழுச்சி, எங்கும் தமிழ். எதிலும் தமிழ் என்பதை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா.? என்று சீமான் கேள்வி எழுப்பினர்.

அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி செய்தியாளர்கள் கேட்கையில், அவர் தனது பாதையாத்திரையை பாதியில் நிறுத்திவிட்டார் என நினைக்கிறன்.  திரும்ப தொடங்கியுள்ளாரா தெரியவில்லை. இப்போதைக்கு அவருக்கு நடக்க நேரமிருக்காது. அடுத்து யாரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று யோசித்து கொண்டு இருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.