Senthil Balaji Case : செந்தில் பாலாஜியை பாஜகவில் சேர சொல்லி வற்புறுத்தவில்லை.! அமலாக்கத்துறை விளக்கம்.!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது வரை அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார். செந்தில் பாலாஜி உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் எம்எல்ஏ, எம்பிக்கள் மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றதிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால்,  சிறப்பு நீதிமன்றம் தான் இந்த ஜாமீன் வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என விசாரிக்க மறுத்ததை அடுத்து , செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனுவை யார் விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு , அந்த வழக்கில், ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதி அல்லி முன்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. அதே வேளையில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறையும் வாதிட்டது.

இந்த வாதத்தின் போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கபில் சிபில், அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் “ஏன் நீங்கள் பாஜகவில் சேரக்கூடாது?” என கேட்டுள்ளனர். அவர் கடந்த 9ஆண்டுகளாக வருமானவரித்துறை கணக்கு தாக்கல் செய்து வந்துள்ளார். அதன்படி அவரது வங்கி பணப்பரிவர்த்தனையை பார்த்தலே அவர் லஞ்சம் பெற்றுள்ளாரா என தெரியும் என வாதிட்டார்.

மேலும், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 284 கோப்புகளில் 222 கோப்புகள் அமலாக்கத்துறையால் அழிக்கப்பட்டு விட்டன எனவும் கபில் சிபில் வாதிட்டார். இதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்தது. செந்தில் பாலாஜி ரொக்கமாக கூட லஞ்ச பணத்தை பெற்று இருக்க கூடும் என கூறினர்.

மேலும், செந்தில் பாலாஜியின் பாஜகவில் சேர சொல்லியதாக கூறுவது முழுக்க முழுக்க பொய். அப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கவில்லை. வலுவான வாதங்கள் இல்லாத காரணத்தால் இதுபோன்று கூறி ஜாமீன் பெற முயற்சிக்கிறார்கள் எனவும் அமலாக்கத்துறை சார்பில் வாதிடபட்டது.

இந்த வழக்கு விசாரணையில் நேற்று இரு தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவு பெற்ற பின்னர், வழக்கின் தீர்ப்பானது வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.