நியூயார்க் நகரில் தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை.!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீபாவளிப் பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். ஒவ்வொரு இந்தியரும் தீபாவளி பண்டிகை என்றால் மதங்களை தாண்டி மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது உண்டு. உலகெங்கிலும் உள்ள இந்தியர்களும் தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியூயார்க் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் 200,000 க்கும் மேற்பட்ட நியூயார்க் நகரவாசிகள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். அங்கு இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் சில பௌத்தர்களால் அனுசரிக்கப்படுகிறது.

அண்மையில், பென்சில்வேனியா மாநில செனட் (அமைச்சரவை) தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிக்கும் மசோதாவை நிறைவேற்றியது, பென்சில்வேனியா மாநில செனட் உறுப்பினர் நிகில் சவல் இதனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.