Sanatana Dharma: அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும்.. இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டம் – அண்ணாமலை

சென்னையில் சமீபத்தில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும். இந்த சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பது நிலையானது, அதாவது மாற்ற முடியாதது.

யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எனவே, எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், இங்கு எதுவும் நிலையானது கிடையாது. எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திமுகவின் என்று பேசினார்.

சனாதனம் குறித்த மைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஒருபக்கம் அவரது பேச்சுக்கு ஆதரவு குரல் எழுந்து வரும் நிலையில், பாஜகவினர் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சனாதன தர்மம் ஒழிப்பு குறித்த கூட்டத்தில், சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே என்பதை தி.க.தலைவர் கி.வீரமணி உறுதிப்படுத்தினார். பின்னர் அதே கூட்டத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இந்து மதத்திற்கு எதிரான இந்த முழு வெறுப்பு பேச்சு பேசும்போது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வாய்முடி கொண்டு அமைதியாக பார்வையாளராக மேடையில் இருந்தார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் தகுதியை சேகர் பாபு இழந்துவிட்டார். எனவே, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக பதவி விலக வேண்டும். செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு முன் அவர் பதவி விலகவில்லை என்றால்,செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் முழுவதும் இந்து அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.