24 உரிமை முழக்கம்! தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக!

Election2024: மக்களவை தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், பா.ஜக உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது.

திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த சூழலில் திருச்சியில் மக்களவைத் தேர்தலுக்கான, ‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் 74 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூடவே கூடாது. குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெற வேண்டும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டி வரி நீக்கம், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், சிறுபான்மையினர் நலன் காக்கப்படும். திருச்சி, புதுக்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் திறக்கப்படும் உள்ளிட்ட 74 வாக்குறுதிகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார்.