ராகுல் காந்தியின் லடாக் பயணம் ஆகஸ்ட் 25 வரை நீட்டிப்பு.!

இரண்டு நாள் பயணமாக நேற்று லடாக் பகுதிக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், தற்போது லடாக்கில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லடாக் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5, அன்று சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (A) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் ஜே-கே என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, லடாக்கிற்கு ராகுல் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை ஆகஸ்ட் 20ஆம் தேதி பாங்காங் ஏரியில் ராகுல் காந்தி கொண்டாடவுள்ளதால் அவரது லடாக் பயணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி 30 உறுப்பினர்களைக் கொண்ட லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC) கார்கில் தேர்தல் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ள கார்கில் கவுன்சில் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இதனால், ராகுல் காந்தி இந்த இடைபட்ட நாட்களில் கார்கில் நினைவிடத்துக்குச் சென்று அங்கு உரையாட இருக்கிறார். மேலும், அவர் லேவில் கால்பந்து போட்டியையும் பார்ப்பார் என்று கூறப்படுகிறது. ராகுல் கல்லூரி நாட்களில் கால்பந்து வீரராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.