தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைப்பெற்றது.தமிழகத்தில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில் அதற்கான மாணவர் சேர்க்கையை ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்டது. அதன்படி முதற்கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 4-ஆம் தேதி நிறைவடைந்தது.

95ஆயிரம் இடங்கள் காலியாகி இருந்த நிலையில் சுமார் 20% இடங்கள் மட்டுமே நிரம்பப்பட்டது. இந்த நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனரான சி.பூரணசந்திரன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கல்லூரிகளில் அவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களை விதிமுறைகளை பின்பற்றி தகுதியுள்ள பிற பாடப்பிரிவுகளில் சேர அனுமதிக்கலாம் என்றும், சுழற்சி 1-இல் கிடைக்காத மாணவர்களுக்கு சுழற்சி 2-இல் இடம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் சில கல்லூரிகளில் இருக்கும் இடங்களை காட்டிலும் குறைவாக விண்ணப்பங்களை பெற்றிருக்கும். அந்த கல்லூரி முதல்வர்கள் அனைவரும் மாற்று நடவடிக்கைகளை பின்பற்றி காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவித புகாருக்கும் மாணவர் சேர்க்கை குழுவினர் வழிவகுக்க கூடாது என்றும், அனைவரும் முதல்வரின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சேர்க்கையை நடத்தி முடிக்குமாறு கூறியுள்ளார்.