1,600 ஆண்டுகள்.! பிரதமர் மோடி திறந்து வைக்கும் நாளந்தா பல்கலைக்கழக சிறப்புகள்…

Nalanda University Bihar - PM Modi [File Image]

பீகார்: 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்வதேச நாடுகளின் பங்களிப்பை கொண்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பீகாரில் 5ஆம் நூற்றாண்டில் சர்வதேச நாட்டு அறிஞர்களின் பங்களிப்புகளோடு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைகழகம். சுமார் 800 ஆண்டுகள் பன்னாட்டு அறிஞர்களின் நூல்கள், ஆய்வுகளோடு சிறப்பாக செயல்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் 12ஆம் நூற்றாண்டு அயல்நாட்டினர் படையெடுப்போடு அழிக்கப்பட்டது. 1600 ஆண்டுகள் பழமையான இந்த நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது புதியதாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது.

இந்த நாளந்தா பல்கலைக்கழகமானது இந்தியா உட்பட, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பூடான், புருனே தருஸ்ஸலாம், கம்போடியா, சீனா, இந்தோனேஷியா, லாவோஸ், மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, போர்ச்சுகல், சிங்கப்பூர், தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து என 17 நாடுகளின் பங்களிப்பை கொண்டுள்ளது.

கட்டுமான பணிகள் தொடங்கும் முன்னரே கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நாளந்தா பல்கலைக்கழத்தில் தற்காலிக கட்டிடத்தில் மாணவர்கள் பயில ஆரம்பித்து விட்டனர். அதன் பின்னர் கடந்த  2017இல் நாளந்தா பல்கலைக்கழக புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது.

தற்போது நாளந்தா பல்கலைக்கழத்தில் அர்ஜென்டினா, பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, கானா, இந்தோனேசியா, கென்யா, லாவோஸ், லைபீரியா, மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அடங்குவர். , மொசாம்பிக், நேபாளம், நைஜீரியா, காங்கோ குடியரசு, தெற்கு சூடான், இலங்கை, செர்பியா, சியரா லியோன், தாய்லாந்து, துருக்கியே, உகாண்டா, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த 1600 ஆண்டுகால பழமை கொண்ட நாளந்தா பல்கலைகழகத்தின் புதிய கட்டடம் பீகார் மாநிலம் ராஜ்கிரில் இன்று திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளந்தா பல்கலைகழகத்தை இன்னும் சற்று நேரத்தில் (10.30 மணியளவில்) திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட 17 நாட்டு தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.