மக்களை பாதிக்காத வகையில் AI க்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதிக்கும்… தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சந்திரசேகர்.!

மக்களை பாதிக்காத வகையில் AIக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதிக்கும் என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு(AI) பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் வேளையில், மக்களுக்கு எந்த வித பாதிப்பும் அளிக்காத வகையில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை (AI) இந்திய அரசு ஒழுங்குபடுத்தும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முன்னேற்றம் குறித்த விளக்கக்காட்சியில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செயற்கை நுண்ணறிவால் (AI) ஏற்படக்கூடிய தீங்குகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை அரசாங்கம் செயல்படுத்தும் என்று கூறினார்.

தற்போது இணையத்தில் அதிகரித்து வரும் குற்ற நடவடிக்கைகள் குறித்தும் கவலை தெரிவித்த சந்திரசேகர், ஆன்லைனில் பயனர்களை ஏமாற்றும் முயற்சியை அரசு முறியடித்து வருவதாகவும் கூறினார். தற்போது 85 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், இது 2025க்குள் இந்த எண்ணிக்கை 120 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.

OpenAI இன் CEO சாம் ஆல்ட்மேன், சமீபத்தில் தனது இந்திய பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாற்றினார். இந்தியாவின் தொழில்நுட்ப அமைப்பு மற்றும் நாட்டின் AI திறன் குறித்தும் உரையாடியதாக சாம் ஆல்ட்மேன் தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். இதற்கு பிரதமரும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை வரவேற்பதாகவும் பதில் ட்வீட் செய்திருந்தார்.